என் உலகம்

என் உலகம்
கனவுகளுடன் துளசி...

Sunday, June 2, 2013

தத்துவும் நானும்

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

இலங்கையில் இருந்து பல ஆயிரம் மைல் தாண்டி வாழ்வதால் இதற்கு முன் பல நண்பிகளின் திருமண வைபவங்களில் பங்கு பற்றும் பாக்கியத்தை இழந்து இருக்கிறேன். தூரத்தில் இருந்து வாழ்த்து அனுப்புவேன் - அந்த நாள் அவர்களின் நினைவுகள் பல ஞாபகத்திற்கு வரும். இம்முறை நான் செல்ல முடியாத மிக முக்கியமான திருமணம் - தத்துவின் திருமணம்.

தர்ஷனா - எப்போது நாங்கள் அவ்வளவு நெருக்கம் ஆனோம் என்று ஞாபகம் இல்லை. எட்டாம், ஒன்பதாம் வகுப்பாக இருக்கலாம் - எங்களுக்கு 15 வயது இருக்கும். ஒரு சிறு குழு அமைத்து விட்டோம் (ஷகீனா, நாதியா, தர்ஷனா, ரைசா, மபாஸா,ஷாகரி மற்றும் நான்) 
கொஞ்ச நாள் ஒன்றாக சுத்தி வம்பை விலைக்கு வாங்கினோம். ஒரு மாதிரி O/L முடிந்து 12ம் வகுப்பிற்கு நுழைத்து விட்டோம். குழு கொஞ்சம் பிரிந்து விட்டது படிக்கும் படிப்பை பொருத்து. நானும் தத்துவும் Maths class . மப்பி , ஷகீ - Science class. பிறகு நாதி, ரைசா, ஷாகரி - Commerce class.

எப்பொழுதும் எனக்கு அருகில் தத்து இருப்பாள். இரண்டு பெரும் பெரும்பாலும் எல்லா விஷயங்களையும் ஒன்றாகவே செய்வோம். ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள் போல, ஆனால் அதை தாண்டி எங்களின் நட்பு வளர்ந்தது. நான் நெட்டை, தத்து குட்டை - உண்மையாவே எங்கள் வகுப்பில் இருந்த அனைவரையும் ஒன்றாக விட்டு பார்த்தால் நான் தான் எங்கள் வகுப்பிலேயே உயரம் - தத்துதான் குள்ளம். (சாரி தத்து)

எனக்கு ஆங்கிலம் நன்கு தெரியும், தத்துவுக்கு நன்கு தமிழ் தெரியும். நான் தத்துவிக்கு ஆங்கிலப்  பாடம்  நடத்த முயல்வேன் - தத்து என் தமிழில் பல குறை காண்பாள்.(அபரிதமான இல்லை, அபரிமிதமான என்று சொல்லி தருவாள்) :)

எனக்கு எங்கட வீட்டுல அப்பா காலையில் கட்டி தரும் பாண் பிடிக்காது. தத்துவுக்கு பாண் என்றால் உயிர். எங்கள் சாப்பாடு பெட்டி அடிக்கடி பரிமாறும். தத்துவின் அம்மாவிண்ட சாப்பாடு என்றால் எனக்கு உயிர். புளிச்ச கீரை பற்றி கேட்கவே வேண்டாம். இப்ப திரும்ப அங்கு போனாலும் அதை எனக்கு சமைச்சு தருவா ஆன்ட்டி. (கொஞ்ச நாளில எனக்கு நல்ல சாப்பாடு கிடைப்பதை கண்டு பொறாமை பட்டு பிரவீணா பெயர் சொல்லி தம்பியும் தத்து வீட்டுல வந்து சாப்பிட தொடங்கியது வேற கதை)

தத்துவை  வாழ்கையில மறக்க முடியாதவாறு பல காரியங்களை செய்துவிட்டாள். அதில ஒன்று என்னுடைய காலுக்கு ஒரு வீர தழும்பை தந்தது. (ஜெகா சேரின் வகுப்பு முடிய  Committee/ Prefect duty வேலைக்கு ஓடி இரண்டு பேரின் கால் சிக்குப்பட்டு விழுந்து நான் ஒரு உடைந்த பைப்பில் காலை அடிச்சு பெரிய காயத்தை எனதாக்கி கொண்டேன். பக்கத்தில் விழுந்த இந்த லூசு காலில ஒண்டுமே இல்லை - இப்ப சட்டை போட்டாலும் என் தழும்பு தெரியும்)

தத்துவின் கதைகளுக்கு சில சமயம் சிரிப்பு வரும் 
சில சமயம் எரிச்சல் கூட வரும் 
ஆனால் என்ன நடந்தாலும் என்னோடு தத்து வருவாள்.
என்னதான் பித்து கதை சொன்னாலும் 
தத்துவின் மனசு வெள்ளை :) (உஜாலா நீலம் போட்டு கழுவுவாள் போல)

ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு காசு சேர்த்தாள் 
என் என்று எனக்கு புரியவில்லை 
ஒரு மாதம் கழிய என் பிறந்த நாளிற்கு அழகான ஒரு சோடி தோடு தந்தாள்.
கண்டு நான் திகைத்து போனேன் - அவ்வளவு கஷ்டப்பட்டு காசு சேர்த்தது இதற்காகவா என 
இப்படி ஒரு நண்பி கிடைக்க நான் குடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா
அதை நான் வீட்டில் காட்ட அப்பா சொன்னார் - கிருஷ்ணருக்கு குசேலன் அவல்  போல உனக்கு தர்ஷனா இவ்வளவு கஷ்டம் பட்டு தோடு வாங்கி வந்தாளா என்று. :)

தர்ஷனா செய்த செயல்களை சொல்லி முடிக்க முடியாது 
தமிழ் சங்கத்துக்கு தலைவியாய் இருக்க அவ்வளவு தகுதி இருந்தும் 
நான் விரும்பினால் தான் செயலாளர் பொறுப்பை எடுக்கிறேன் நீ தலைவி பொறுப்பை எடு என்று சொன்னவள். ஏன் என்றேன்? இருவரும் சேர்த்து கலைவிழா செய்வோம் என்றாள், எனக்கு எப்போதும் உன்னோடு சேர்த்து எல்லாம் செய்ய பிடிக்கும் என முடித்தாள்.
நல்ல காலம் அது நடக்கவில்லை. இவ்வளவு தமிழ் பற்று மிக்க தலைவியை எங்கள் பாடசாலை தமிழ் சங்கம் இழந்து இருக்கும்.நான் ஆங்கில இலக்கிய வட்டத்துக்கு தலைவி ஆக , தர்ஷனா தமிழ் சங்கத்துக்கு தலைவி ஆனாள்.
 (மேலே  உள்ள வரிகளை எழுதி விட்டு யோசித்தேன் நான் இவளின் நட்பை பாராட்டியது பத்தவே பத்தாது என்று)

போன வருட இறுதியில் நான் வீடு சென்ற போது கூட ஒரு அழகிய சேலையை பரிசு தந்தாள் என் நண்பி. வழமையாக வீட்டில் உள்ள பெரியவர்கள் தான் அன்பளிப்பு தருவார்கள், இப்ப நான் வேலை செய்வதால் யாருமே தருவது இல்லை. :( ஆனால் அன்பு நண்பி வேலை தொடங்கி விட்டேன் இந்தா என் அன்பளிப்பு என்றாள் - அமெரிக்காவுக்கு கொண்டு வந்து விட்டேன் அந்த சேலையை. :)

இப்படி பட்ட அன்பு நண்பிக்கு இந்த மாதம் கல்யாணம் - வேலை காரணமாக கலந்து கொள்ள வழி இல்லை. ரொம்ப கவலையாக இருந்தது - மனதில் இருக்கும் ஒரு பாரத்தை இறக்கவே எழுதினேன். திருமண பந்தத்தில் இணைந்து அன்பான குடும்பம் அமைத்து ஒரு அழகான வாழ்கை வாழ என் நல்லாசிகள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. (இந்த பதினாறு பாக்கியங்கள் பற்றி கூட மல்லிகா மேடம் அளவுக்கு எனக்கு சொல்லி தந்தது, தத்து தான்)